Welcome!!


தானம்

Saturday, August 30, 2008




இன்று பிரதோசம் என்பதால் வழக்கத்தைவிட கோயிலில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. போக்குவரத்து சாலைகளை சற்று ஆக்கிரமித்தே நிறுத்தப்பட்டிருந்தன வாகனங்கள். அக்கா பூஜைக்கு தேவையான சாமான்கள் வாங்கிக்கொண்டிருந்தாள். நானும் மாமாவுடன் தெற்குவாசலில் காத்திருந்தோம். அதுதான் வீட்டிலிருந்து அருகாமையில் அமைந்திருக்கும் பெரியகோயில் வாசல் என்பதால் வீட்டிலிருந்து யார் கோவிலுக்கு சென்றாலும் அந்தவாசல் வழி செல்வதுதான் வழக்கம்.

தனக்கும் மாமாவுக்கும் சேர்த்து இரண்டு நெய் விளக்குகள் வாங்கியிருந்தாள் அக்கா. எனக்கு விவரம் தெரிந்த நாட்களிலிருந்தே மாலை, பூஜைப்பொருட்கள் வாங்குவதற்கும் கட்டணமில்லாமல் காலணி விட்டு வருவதற்கும் கோயிலை ஒட்டியிருந்த அந்த பூக்கடைதான் எங்களின் வழக்கமான கடையாய் இருந்து வருகிறது. அக்கா எப்பொழுதுமே எனக்காக அர்ச்சனை சீட்டோ, விளக்கோ எதுவும் வாங்குவதில்லை. அது எனக்குப் பிடிக்காது என்பதும் அவளுக்கு நன்கு தெரியும். சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் மீது எனக்கு அவ்வளவாக அக்கறை கிடையாது என்பதும், நான் நாத்திகன் இல்லை, அதே வேளையில், சமயம் கடவுள் மீதான என் நம்பிக்கைகள் வேறுபட்டவை என்பதும் நன்றாகவே அறிவாள். இருபத்திநான்கு வருடம் கூடவே இருக்கும் தம்பியை வீட்டில் அனைவரை விடவும் நன்கு புரிந்துவைத்திருப்பவள் அவள்.

மாமா, நெல்லை டவுணில் ஒரு அரசு வங்கியில் துணை மேலாளர். தினமும் சுத்தமல்லியிலிருந்து அலுவலகத்திற்கு பயணம் செய்வது கஷ்டமான விஷயம் என்பதால், எங்கள் வீட்டு மாடி போர்ஷனில் அக்காவுடன் தனிக்குடித்தம் இருப்பவர். அப்பா மறுக்கும் பொழுதும் வாடகையை வழக்கமாக வங்கிக்கணக்கில் செலுத்திவிடுபவர்.

வெளிப்பிரகாரத்திலேயே கூட்டநெரிசல் அதிகமாக இருந்தது. கொடிமரத்தின் வலதுபக்க விளக்குமேடையருகே சென்று விளக்கேற்றுவது கூட சற்று சிரமமான விசயம்தான். எனவே தனது இரண்டு விளக்குகளையும் ஏற்றி கொடிமரத்தின் அருகிலேயே வைத்தாள் அக்கா. 'இங்கே விளக்கேற்றக்கூடாது' என்ற எண்ணெய் வழியும் ஒரு போர்டை அலட்சியம் செய்தபடி ஏற்கனவே பலவிளக்குகள் எரிந்துகொண்டிருந்தன.

கருவறையில் தொடங்கிய தரிசன வரிசை, உள்பிரகாரத்தை ஒரு முறை சுற்றிக்கொண்டு வெளிபிரகாரம் வரை நீண்டிருந்தது. வரிசையை ஒழுங்குபடுத்தி விடுவதில் சில காவலர்கள் ஈடுபட்டிருந்தார்கள். வரிசையைப் பார்த்து மலைத்து நின்றிருந்தார் மாமா.

'ஸ்பெஷல் கியூவில போனா சீக்கிரம் வந்துடலாங்க' என்றாள் அக்கா.

'போகலாம்தான். அதுக்கு உன் தம்பி ஒத்துக்கமாட்டானே' என்றார் மாமா. அவர் சற்று எரிச்சலுடன் சொல்லியதுபோல் எனக்குத் தோன்றியது.

'பரவாயில்க்கா.. எனக்கு எதுவாயிருந்தாலும் சரி' என்றேன். எனது நம்பிக்கைகளும் கோட்பாடுகளும் அடுத்தவரை பாதிக்கும் பட்சத்தில் அதை தளர்த்திக்கொள்வதும் என் வழக்கம்.

'சரி, ஸ்பெஷல் கியூவிலே போயிடலாம்' என்றார் மாமா. இரசீது வாங்குவதற்காய் அலுவலகம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

மாமா என்ன நினைத்தாரோ இரசீது வாங்கச் சென்ற என்னை திரும்ப அழைத்தார். 'சூரி, இங்க வேணாம், வாடா.. எப்படியும் இரசீது முப்பது ரூவா ஆகும். ஸ்பெஷல் கியூவும் நீளமாத்தான் நிக்குது. பேசாம நீலகண்டன் சாமியை பாத்து அம்பது ரூபா குடுத்தா நல்லா தரிசனம் காட்டிடுவார் ' என்றார். நான் அமைதியாக தலையாட்டிவிட்டு நின்றேன். எனது கோட்பாடுகளைத்தான் நான் இன்றைக்கு மாத்திரம் நான் ஏற்கனவே மூட்டைகட்டி வைத்தாகிவிட்டதே. அக்காவின் கையில் ஐம்பது ரூபாயை திணித்துவிட்டு அமைதியாகிக் கொண்டேன்.

நீலகண்டன் அதே கோயிலில் பணியாற்றுகிறவர். அர்ச்சகர். எப்பொழுதும் நவக்கிரக சந்நிதியில் தான் அவரது வழக்கமான வேலை. எங்களுக்கோ எங்கள் உறவினர்களுக்கோ கணபதி ஹோமம் முதலான விசேஷங்களை அவர்தான் நடத்திக்கொடுப்பார். இதுபோன்ற கூட்டம் வழியும் நாட்களில் அவரைபார்த்து ஐம்பதோ நூறோ கொடுத்துவிட்டால் போதும். கருவறைக்கு மிக அருகில் கொண்டுபோய் நிறுத்திவிடுவார். சுவாமி கழுத்திலிருந்து மாலை சகிதம் பிரசாதமும் வாங்கித்தருவார்.

உள்பிரகாரத்திலிருந்து பக்தர்கள் வெளிவரும் வழியில் உள்ளே நுழைந்து வலப்பக்கமாக திரும்பி நவக்கிரக சன்னிதியை அடைந்தோம். அங்கே நீலகண்ட சாமிக்குப்பதிலாக வேறுயாரோ தீபாராதனை காட்டிக்கொண்டிருந்தார். அக்கா அவரிடம் விசாரித்தாள்.

'இங்கே, வழக்கமாக இருப்பாரே, நீலகண்டன் சாமி..'

'ஓ, அவரா, அவர் இப்போ அம்பாள் சன்னிதிக்கு போயாச்சே..' என்றவர், 'என்ன, தரிசனம் பண்ணனுமா' என்று கேட்டார் சற்று குரலை தாழ்த்தி.

மாமா ஆமென்று என்று சொல்ல, 'நான் ஏற்பாடு பண்ணிடறேன்' என்றவர் மடியிலிருந்து செல்போன் எடுத்து யாருடனோ பேசினார். பேசும்போது திரும்பி மூன்று பேரா என விரல்காட்டி ஊர்ஜிதம் செய்துகொண்டார். பேசிமுடித்து, 'செத்த நிமிஷம் பொறுங்கோ, நம்ம பையன் வந்துண்ருக்கான்.நெல்லையப்பரையும் காந்திமதியையும் பேஷா காட்டிடுவான்' என்றார்.

சற்றுநேரத்தில் அங்கு வந்த சிறுவயது குருக்கள் தன்னை பெயர் சொல்லி அறிமுகம் செய்துகொண்டார். பின் எங்களை நேராக சுவாமி சந்நிதிக்கு அழைத்து சென்றார். ஸ்பெஷல் கியூவிற்கும் மிக அருகில், கருவறையின் வாசல் பக்கமாய் எங்களுக்கு வழிவிடப்பட்டது. நாங்கள் தரிசனம் செய்துகொண்டிருக்க எங்களை அழைத்து வந்தவர் வரிசை ஒழுங்கு செய்துகொண்டிருந்த காவலருடம் நட்பாய் பேசிக்கொண்டிருந்தார்.

சிறப்பு ஆரத்தி காட்டப்பட்டது. மாமாவும் தீபத்தட்டில் கணிசமாக காணிக்கை போட்டார். கருவறையின் மிக அருகில் சிறப்புத் தரிசனத்தின் பொருட்டு நிற்பதால் அத்தொகை போட வேண்டிய கட்டாயமும் இருந்தது. பிரசாதத்துடன் கொடுக்கப்பட்ட பிச்சிப்பூ மாலையில் ரொம்பவே சந்தோசமானாள் அக்கா.

வரிசையில் காத்திருந்து வந்தவர்கள் நெற்றி வியர்வை துடைத்தபடியே தரிசனம் முடித்து நகர்ந்து கொண்டிருந்தார்கள். சிலர் எங்களை கோபத்துடன் பார்ப்பதாகவே பட்டது எனக்கு. அப்பொழுது எனக்கு தரிசனத்தில் ஆர்வமில்லாமல் இருந்தது. மனதில் கொஞ்சம் குற்ற உணர்ச்சியும் இருந்தது.

சுவாமி தரிசனம் முடிந்து அழைத்துசென்றவர் அம்பாள் சந்நிதியிலும் நல்ல தரிசனம் காட்டினார். அங்கும் நல்லமுறையில் தரிசனம் முடித்து காணிக்கையிட்டு திரும்பினோம். அம்பாள் சந்நிதியில் பிரசாதத்துடன் வாங்கிய அரளிப்பூவை தலையில் வைத்துக்கொண்டாள் அக்கா. உள்பிரகாரத்தில் நுழைந்துபொழுது கைகுட்டை எடுத்து வியர்வை துடைத்துக்கொண்டார் மாமா. அருமையான தரிசனம் என்றார். பிரதோச நாளில் இவ்வளவு அருமையாக இதுவரை தரிசனம் கிடைத்ததில்லை எனவும் சொல்லிக்கொண்டார். அவர்கள் இருவரின் மகிழ்ச்சியும் நிறைவும் அவர்களின் முகத்தில் தெரிந்தன.

அக்கா பணப்பை பிரித்து ஐம்பது ரூபாய் எடுத்துக் அந்த குருக்களிடம் கொடுத்தாள். அவர் பார்த்துவிட்டு ' வழக்கம் நூறு ரூபாய்' என்றார் புன்னைகையுடன். மாமா 'ஓ அப்படியா?' என்றபடி தன் பர்ஸை பிரித்து ஐம்பது ரூபாய் எடுத்துக்கொடுத்தார். குருக்களிடம் செல்போன் நம்பர் வாங்கி தன் தன் செல்போனில் குறித்துக்கொண்டார். அதன்பின், அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளிபிரகாரம் சுற்ற ஆரம்பித்தோம். நாகர் சந்தியில் கொஞ்ச நேரம் அமர்ந்துவிட்டு வாசலுக்கு வந்தோம்.

வாசலின் இருபுறமும் குழுமியிருந்தார்கள் வழக்கமான பிச்சைக்காரர்கள். உடல் ஊனமுற்றோர்களாகவும், வயதானவர்களாகவே இருந்தார்கள் அனைவரும். சுமாராக பதினைந்துபேர் இருக்கும் அக்கூட்டத்தில் ஒருவரிடம் இருபது ரூபாய் கொடுத்து அனைவரும் பகிர்ந்துகொள்ளச்சொன்னேன்.

பூக்கடையில் காலணிகள் தேடி அணிந்துகொண்ட அக்கா திரும்பி என்னை ஒரு அர்த்தப்பார்வை பார்த்துவிட்டு இயல்பானாள். மாமாவோ சட்டென ஒருகணம் திரும்பிப்பார்த்தார். 'காசு என்ன மரத்துலயா காய்க்குது? பாத்து செலவு பண்ணுடா' என்றார். 'காசோட அருமை அது இல்லாட்டித்தான் தெரியும்' என்றபடி அக்காவிடம் திரும்பி முணுமுணுத்தார்.

உள்ளே ஐம்பதும் நூறுமாய் காணிக்கையிட்டு பிச்சைக்காரர்களுக்கான தானத்தில் கணக்குபார்க்கும் மாமாவை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். மேலும் அந்த பிச்சைக்காரர்களைக் காட்டிலும் கொஞ்சம் அதிகமாகவே பரிதாபப்பட்டேன்.

பிஜு

Sunday, August 10, 2008




இத்துடன் பதினான்கு மாதங்கள் கடந்துவிட்டன. சென்றமுறை விடுப்பில் வந்திருந்த பொழுதே தெங்கமம் சென்று விசாரித்துவர நினைத்தேன். இருந்தும் முடியவில்லை. பிஜு இறந்து இரண்டு மாதங்கள் கழிந்திருந்தநிலையில் அங்கு சென்று விசாரிப்பது ஆறும் ரணத்தை கீறிப்பார்ப்பது போலாகுமோ என தயங்கினேன். மேலும் நேரில் சென்று விசாரிக்காதது இன்றுவரைக்கும் மனதில் ஒரு குற்ற உணர்வாகவே இருந்து வருகிறது. இந்தமுறை கண்டிப்பாக போய்வர வேண்டும். அபியும் என்னுடன் வருவதாக சொல்லியிருந்தான்.

பிஜு நான் மற்றும் அபி சிறுவயதிலிருந்தே நண்பர்கள். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை ஒன்றாகவே படித்தோம். இடையில் எத்தனையோ நண்பர்கள் சேர்ந்தும் பிரிந்தும் போயிருந்தாலும் நாங்கள் மூவரும்தான் பிரியாமலேயே இருந்தோம். எனது கல்லூரி படிப்பிற்காக எங்கள் குடும்பம் அருகிலுள்ள நகரத்திற்கு இடம்பெயர்ந்தது. அதன்பின்னும் அடிக்கடி போன்பேசுவது மூலமாகவும் வாரயிறுதி சந்திப்புகள் மூலமாகவும் தொடர்ந்தது எங்கள் நட்பு.

நான் வேலைக்காய் கத்தார் கிளம்பும்போது வழியனுப்ப சென்னை வந்திருந்தான் பிஜு. அப்பொழுதுதான் அவனை கடைசியாக பார்த்தது. அப்பொழுதும் சரி, அதன் பின் போனில் பேசும்போதும் சரி, தனக்கும் கத்தாரில் ஒரு வேலை பார்க்கசொல்லுவான். ஆனால் அவன் அம்மா அவனை எங்கும் அனுப்ப தயாராயில்லை என நன்றாக தெரிந்தே நான் அதுபற்றி முயற்சி ஏதும் எடுத்திருக்கவில்லை.

பிஜுவுக்கு சிறுவயதிலிருந்தே இதயத்தில் ஏதோ பிரச்சினை. அதற்காக அவன் தொடர்ந்து மருந்தும் உட்கொண்டிருந்தான். எங்களுக்கு விபரம் தெரிந்த வரையில் அதனால் அவனுக்கு எந்தவித தொந்தரவும் இருந்தது இல்லை. இருந்தும் அது அவன் உயிரை பறிக்குமளவு கொடூரமாய் அமையும் என நாங்கள் யாருமே நினைக்கவில்லை.

அந்த மலைச்சாலையில் ஒரு பர்லாங்கு தூரத்தில் இருக்கும் நான்கு வீடுகளில் அவன் வீடும் ஒன்று. பாதையின் இருபுறமும் ரப்பர் தோப்புகள் அடர்ந்திருந்தன. சாலையோரங்களில் அன்னாசிப்பழங்கள் அதிகமாக பழுத்திருந்தன. இந்தத்தோப்புகள் எல்லாம் ஒரு காலத்தில் பிஜு வீட்டுக்கு சொந்தமானது தான்.

இடுப்பில் செருகப்பட்ட அரிவாளுடனும் புல்கட்டு சுமந்துசெல்லும் ஒரு பெண் சாதாரணமாக என்னை கடந்து முன்னேறி சென்றாள். அபியும்கூட சாதாரணமாக ஏறி விட்டான். எனக்குத்தான் மூச்சுவாங்கியது.
பிஷுவின் அம்மா வாசலிலிருந்தே எங்களை கவனித்திருக்க வேண்டும். எங்களை வரவேற்கும் பொருட்டு சாலையில் கொஞ்சம் இறங்கிவந்து புன்னகையுடன் நின்றார். நானும் மூச்சுவாங்கியபடியே ஒருவழியாக ஏறினேன்.

'என்ட ஈஸ்வரா, ஆரா வருந்நது? ஈ புள்ளாருக்கு இந்நெங்கிலும் இவ்விட வரானுள்ள வழி அறிஞ்ஞல்லோ' என்றபடியே எனது கைகளை இறுகப்பற்றிக்கொண்டார். அந்த ஒருகணத்தில் என்ன பேசுவது எனத்தெரியாமல் புன்னகைத்தபடியே நின்றேன் நான்.

என்னையும் அபியையும் நலம் விசாரித்தபடியே வீட்டுக்குள் அழைத்துசென்றார். நாற்காலி எடுத்துப்போட்டு அமரச்சொன்னார். இருந்த ஒரு நாற்காலியில் அபியை அமரச்சொல்லிவிட்டு அருகிலிருந்த கட்டிலில் அமர்ந்தேன்.

'போன தடவயே நான் வராம போனதுக்கு என்மேல கோபம் ஏதும் இல்லியேம்மா?'

'ஆ... அங்ஙன ஒன்னுமில்லா.. எண்ட மக்களெ எனிக்கு அறியத்தில்லியோ' என்றார் மலர்ந்த புன்னகையுடன்.

கட்டிலில் என் அருகிலேயே அமர்ந்தார். என்னை கண்டதில் அவரது மகிழ்ச்சி முகத்தில் நன்றாக தெரிந்தது. அதேசமயம் அவர்களின் முகத்தில் இழையோடியிருந்த சோகமும் தெரியாமல் இல்லை.

அவரின் தலைக்கு பின்னால் சிரித்தபடி இருந்தான் பிஜு. படத்தில்தான். அதன் கீழே அவனுக்கு மிகவும் பிடித்த அவன் புல்லாங்குழலும் இருந்தது. அவன் விரல்களின் ஸ்பரிசங்களை அதிகம் கண்டிருந்த அது இப்பொழுது அந்த குடும்பத்தில் பொக்கிசமாய் இருக்க வேண்டும். அருகிலேயே ஒரு விளக்கும் அடிக்கடி மின்னிக்கொண்டேயிருந்தது.

அவன் இறந்தநாளின் முந்தையநாள் மருத்துவனை நிகழ்ச்சிகளெல்லாம் கண்ணீருடனே கூறினார். நானும் பேச வார்த்தைகள் ஏதுமில்லாமல் அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தேன். அபி அங்கு அடிக்கடி செல்பவனாதலால் எழுந்து முற்றத்தில் சென்று நின்றுகொண்டான். என் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மூழ்கிக்கொண்டிருந்தன. அதிகமாய் தொண்டை அடைத்தது. அவ்வப்போது மௌனம் நிலவியது.

என்னையும் பேசி அழவைப்பது அவருக்கு பிடிக்கவில்லையோ என்னவோ, கண்ணீர் துடைத்துக்கொண்டு வேறுபேச்சு பேச ஆரம்பித்தார். இருந்தும் அவரது கண்கள் கலங்குவதை நிறுத்துவதாயில்லை. அதற்குமேல் உட்காரமுடியாமல் மார்பின்மேல் கிடந்த துண்டால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே எங்களுக்கு சாயா போடுவதாக சொல்லி அடுக்களை சென்றார்.

சாயா குடித்து முடிக்கும்போதுதான் உள்ளிருந்து பாட்டியின் குரல் கேட்டது.

'ஆராடி அது?.. பிரவிணானோ?'

'ஆமா பாட்டி, எப்படி இருக்கீங்க? '

'எனிக்கெந்தா? நி எப்போலு வந்நு? கண்டிட்டு ரெண்டு வருசம் ஆயில்லோ மோனே?' என கேட்டபடி மார்பின் கச்சையை இறுக்கி முடிந்துகொண்டே வந்த பாட்டியை கைபிடித்து கட்டிலில் அமரவைத்தார் அம்மா.

எண்பது வயதை தாண்டியிருக்கும் பாட்டிக்கு. எனக்கு விபரம்தெரிய அவருக்கு கண்கள் தெரிவதில்லை. இருந்தும்கூட இந்தவயதிலும் தோட்டத்திலும் வீட்டிலும் ஏதாவது வேலை செய்துகொண்டே இருப்பார். அம்மாவைவிட பிஜுவின் மீது உயிரையே வைத்திருந்தவர். அவர் செய்யும் மீன்குழம்பு என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

வீட்டின் முன்னால் இருக்கும் தோப்புகள் அனைத்தும் பாட்டியின் பூர்வீக சொத்துதான். அனைத்தும் பிஜுவின் மருத்துவச் செலவுக்காகவே விற்கப்பட்டன. அம்மாவும் வழக்கமாக முந்திரி பண்ணையில் இரண்டு ஷிப்ட் வேலை பார்ப்பார். வார விடுமுறை நாளில் கூட லேகியம், வடகம் செய்வதுமாக கஷ்டப்படுவார். அப்படியிருந்தும், அந்த மருந்தும்கூட அவனை குணப்படுத்தவில்லை என்பது மிக வருத்தமானது.

எனது வேலைகுறித்தும் விடுமுறை நாட்கள் குறித்தும் கேட்டுக்கொண்டிருந்தார் அம்மா. கத்தார் செல்ல வேண்டுமென பிஜு மிகவும் விரும்பியதாகவும், என்னுடன் ஒரு ஆறு மாதமாவது அனுப்பியிருக்கலாம் என்றும் கூறினார். கொஞ்சம் சிரிப்புடனும் கொஞ்சம் வருத்ததுடனும் கழிந்த அந்த உரையாடலின் ஒவ்வொரு வாக்கியத்திலும் பிஜூ இல்லாமல் இல்லை.

அம்மாவுடன் பேசிய வண்ணம் இருந்தாலும் நான் பாட்டியை கவனித்துக்கொண்டே இருந்தேன். நாங்கள் பேசிக்கொண்டேயிருக்க பாட்டி சுவற்றில் தடவிப்பார்த்து அவனின் புல்லாங்குழலை எடுத்து கையில் வைத்துக்கொண்டார். அவரது விரல்கள் புல்லாங்குழலின் துளைகளை ஒவ்வொன்றாய் தடவிக்கொண்டே வந்தது. கடைசித்துளையை தடவி முடிக்கும் தருணம் பார்வையில்லாத அவர் கண்களிலிருந்து ஓர் துளி கன்னத்தில் வேகமாய் உருண்டோடி மார்க்கச்சையில் விழுந்து காணாமல்போனது.

இன்னும் படத்தில் புன்னகைத்தபடியே இருந்தான் பிஜு.